செய்திகள்

குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக உதவி வழங்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவில்லை: பாகிஸ்தான் சொல்கிறது

Published On 2017-05-20 15:02 GMT   |   Update On 2017-05-20 15:02 GMT
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக உதவிகள் வழங்குவது தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.

இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சர்வதேச நீதிமன்றம், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், அவருக்கு தூதரக உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.



இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இவ்வழக்கில் முடிவு வரும் வரையில் குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை பாகிஸ்தான் நிறுத்திவைக்க வேண்டும் என்று மட்டுமே சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக உதவிகள் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தூதரக உதவி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளது. இதுபோன்ற மரண தண்டனை தொடர்பான வழக்குகள் வரும்போது, சர்வதேச நீதிமன்றம் எப்போதும் தடை உத்தரவு பிறப்பிக்கும்.

சர்வதேச கோர்ட்டில் பாகிஸ்தானுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என கூறுவது தவறு. இந்த வழக்கில், விரைவில் விசாரணையை தொடங்க முயற்சி செய்வதுடன், முழு தயாரிப்புடன் எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News