செய்திகள்

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரம்: பிரிட்டன் கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

Published On 2017-05-13 06:29 GMT   |   Update On 2017-05-13 06:29 GMT
லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான விசாரணை பிரிட்டன் கோர்ட்டில் ஜூன் 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
லண்டன்:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திரும்பச் செலுத்தவில்லை. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் மல்லையா தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி திடீரென வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்.

லண்டனில் தங்கி இருக்கும் அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. அவரை நாடு கடத்தும்படி பிரிட்டன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், கடந்த மாதம் அவர் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது.



இந்நிலையில், மல்லையாவை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவில் இருந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் 4 அதிகாரிகள் லண்டன் சென்றனர். அவர்கள் சார்பில், பிரிட்டன் அரசு வழக்கறிஞர்கள் அமைப்பு (சிபிஎஸ்), கோர்ட்டில் வாதாட உள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விசாரணையானது ஜூன் 13-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சிபிஎஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News