செய்திகள்

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

Published On 2017-04-24 03:36 GMT   |   Update On 2017-04-24 03:36 GMT
மெக்சிகோவில் போலீஸ் நடத்திய வேட்டையில் போதை பொருள் கடத்தல் மன்னர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மெக்சிகோவின் வடகிழக்கு மாகாணமான தாமாலிபஸ் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மன்னனான ஜூலியன் லூய்சா சாலினாஸ் என்ற எல் கமான்தண்டே டோரா பல்லாண்டு காலம் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அமெரிக்க எல்லையில் உள்ள ரெய்னோசா நகரில் ஏற்படுகிற கலகங்களுக்கு இவர்தான் முக்கிய காரணமாக திகழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர் ரெய்னோசா நகரில் சுற்றி வளைக்கப்பட்டபோது, போலீசாரை நோக்கி சுட்டார். போலீசார் தங்கள் துப்பாக்கிகளால் திருப்பி பதிலடி கொடுத்தனர். இதில் அவர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதே போன்று மற்றொரு போதைப்பொருள் கடத்தல் மன்னனான பிரான்சிஸ்கோ பாஞ்சோ காரியான், தாமாலிபஸ் மாகாணத்தின் தலைநகர் அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என கூறப்படுகிறது.

அமைப்பு ரீதியிலான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறவர்களுக்கு எதிராக மெக்சிகோ போலீஸ் நடத்திய வேட்டையில் இந்த போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெக்சிகோ போலீஸ், டுவிட்டரில் கூறி உள்ளது. 

Similar News