செய்திகள்

ஈராக்: தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உடல் சிதறி பலி

Published On 2017-03-30 06:17 GMT   |   Update On 2017-03-30 06:17 GMT
ஈராக் நாட்டில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் லாரியில் கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததில் 17 அப்பாவி பொதுமக்கள் உடல்சிதறி பலியாகினர்.
பாக்தாத்:

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று அதிக அளவிலான கார்கள் சோதனைக்காக காத்திருந்தன. அப்போது, வெடிகுண்டுகள் நிரம்பிய லாரியை ஓட்டி வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள், சோதனைச் சாவடியை நெருங்கியதும் அங்குள்ள கார்கள் மீது மோதி வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தனர்.

தீவிரவாதிகளின் இந்த கோர தாக்குதலில் 17 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி பலியானார்கள். வெடிகுண்டு வெடித்தபோது அங்குள்ள கார்கள் தீப்பிடித்ததால், காரில் உள்ளே இருந்த சிலர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இன்னும் எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நகரமான மொசூலில் சில தினங்களுக்கு முன்னர், ஐ.எஸ் தீவிரவாதிகளை ஈராக் ராணுவம் தோற்கடித்தது.

எனவே, மொசூல் நகரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடியாக ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News