செய்திகள்

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி

Published On 2017-03-22 05:00 GMT   |   Update On 2017-03-22 05:00 GMT
வட கொரியா மீண்டும் புதிய ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. ஆனால் இச்சோதனை தோல்வி அடைந்ததாக தென் கொரியா ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பியாங்யாங்:

வடகொரியா எத்தகைய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதனை நடத்தக்கூடாது என ஐ.நா.சபை தடைவிதித்துள்ளது. எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

அதை கண்டு கொள்ளாத வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது.



இம்மாத தொடக்கத்தில் 4 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. அவை 1000 கி.மீட்டர் (620 மைல்) தூரம் பாய்ந்து சென்று தாக்க கூடியது. அவை ஐப்பான் கடல்பகுதியில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வட கொரியா மீண்டும் புதிய ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. இச்சோதனை வடகொரியாவின் வன்சான் நகர கடல் பகுதியில் நடத்தப்பட்டது.

ஆனால் எத்தனை ஏவுகணைகள் வீசி சோதனை நடத்தப்பட்டது என தெரியவில்லை. அவை எத்தகைய ரகம் என்றும் தகவல் வெளியாகவில்லை.

ஆனால் இச்சோதனை தோல்வி அடைந்ததாக தென் கொரியா ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்துள்ளது.

விண்ணில் ஏவுகணை செலுத்தப்பட்ட சில வினாடிகளில் அது வெடித்து சிதறி விட்டது என தெரிவித்துள்ளது.

Similar News