செய்திகள்

தர்கா மீது தற்கொலைப்படை தாக்குதல் எதிரொலி - 39 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்

Published On 2017-02-17 09:24 GMT   |   Update On 2017-02-17 11:00 GMT
பாகிஸ்தானில் உள்ள ஒரு தர்காவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலின் எதிரொலியாக பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 39 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இஸ்லாமாபாத்:

தெற்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியான சிந்து மாகாணத்தில் உள்ளது செவான் நகரில் லால் ஷபாஸ் குவாலண்டர் தர்கா உள்ளது. இதில் மதகுரு சுபி சமாதி உள்ளது. கடந்த புதன்கிழமை மாலை இங்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கூடியிருந்தனர்.

அப்போது திடீரென ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளுடன் தர்காவிற்குள் பாய்ந்தார். இதனால் வெடிகுண்டுகளுடன் அவர் வெடித்து சிதறினார். இதில் தர்காவில் இருந்தவர்கள் 30 பேர் பலியானார்கள். 50-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்ற நிலையில், காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இந்த கொடூர தாக்குதலின் பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உத்தரவையடுத்து, இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை வேட்டையாட நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். இதன் பலனாக கடந்த 24 மணி நேரத்தில் 39 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Similar News