செய்திகள்

அகதிகளை வரவேற்கும் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும்: அமெரிக்காவுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

Published On 2017-01-28 13:45 GMT   |   Update On 2017-01-28 13:45 GMT
அகதிகளை வரவேற்கும் அமெரிக்காவின் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும் என ஐ.நா. அகதிகள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஜெனீவா:

அமெரிக்காவில் அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு தற்காலிகமாக தடைவிதிக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். அகதிகளை குடியமர்த்தும் திட்டத்தின் செயல்பாடுகள் 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வழங்குவது 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த ஐ.நா. அகதிகளை வரவேற்கும் அமெரிக்காவின் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. அகதிகள் அமைப்பு மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், உலகின் மிக முக்கியமான திட்டங்களில் அமெரிக்காவின் மீள்குடியேற்றத் திட்டமும் ஒன்று என பாராட்டியுள்ளது.

‘இந்த நீண்டகால கொள்கையானது இரட்டை வெற்றியை வழங்குகிறது. அதில் முதலாவது, உலகில் மிகவும் பாதிக்கப்படும் மக்களில் சிலரை மீட்பது, இரண்டாவது, புதிய சமூகங்களில் அவர்களை வளப்படுத்துவது ஆகும். உலகளவில் அகதிகள் மற்றும் குடியேறுவோர் அந்தந்த நாடுகளுக்கு வழங்கும் பங்களிப்பும் நேர்மறையாக உள்ளது.

எனவே, மோதல் மற்றும் அடக்குமுறையில் இருந்து தப்பி வரும் அகதிகளை பாதுகாக்கும் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியம், புதிய தலைமையிலும் தொடர வேண்டும். மதம், தேசியம் மற்றும் இனத்தை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு, உதவி மற்றும் மீள்குடியேற்ற வாய்ப்புகளில் அகதிகள் சமமாக நடத்தப்படுவார்கள் என நம்புகிறோம்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News