செய்திகள்

ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரின் தெற்கு பகுதியில் முன்னேறி வரும் ஈராக் படைகள்

Published On 2016-11-02 19:35 GMT   |   Update On 2016-11-02 19:35 GMT
ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரின் தெற்கு பகுதியில் அந்நாட்டு படைகள் முன்னேறி வருகின்றது.
மொசூல்:

ஈராக் நாட்டில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மிகப்பெரிய நகரமான மொசூலை கைப்பற்றும் முனைப்பில் அந்நாட்டு படைகள் தீவிரவாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மொசூல் நகரின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள பார்டாலா, பஸ்வாயா, கோக்ஜாலி ஆகிய மூன்று கிராமங்களில், பார்டாலா கிராமத்தை ஈராக்கியப் படையினர் பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

மேலும் மொசூல் நகரை நோக்கி ஈராக் படைகள் முன்னேறி வருவதாக அந்நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரின் தெற்கு பகுதியில் ஈராக் படைகள் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொசூல் நகரின் இந்த பகுதியில் தான் ஏராளமானோர் ஐ.எஸ் அமைப்பினரால் தூக்கிலிடப்பட்டனர்.

ஈராக் ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு படைகள் ஹம்மாம் அல்-அலில்-ன் முன் பகுதிக்குள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னேறி வரும் ஈராக் படைகளை தடுக்க  மொசூல் நகருக்கு பொதுமக்களை பலவந்தமாக அனுப்பி அவர்களை தற்காப்பு கேடயமாக ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்துவதாக ஐ.நா. நேற்று தெரிவித்து இருந்தது.

அமெரிக்கா ஆதரவு ஈராக் கூட்டுப்படைகள் கடந்த அக்டோபர் 17-ம் தேதி முதல் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News