செய்திகள்

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் பயங்கர ரெயில் விபத்து: 3 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Published On 2016-09-29 15:19 GMT   |   Update On 2016-09-29 15:19 GMT
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரெயில் நிலையத்தில் பயணிகள் மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரெயில் நிலையத்தில் (அமெரிக்கா நாட்டில் நேரப்படி காலை 8.40 மணி அளவில்) வேகமாக வந்த பயணிகள் ரெயில்  கட்டுப்பாட்டை இழந்து ரெயில் நிலையம் மீது பயங்கரமாக மோதியது.

ரெயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு, நிலையத்தின் வரவேற்பு அறைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

இதில் ரெயில் நிலையம் அதிகமாக சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரெயில் விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் ரெயிலில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அம்மாகாண போக்குவரத்து பாதுகாப்பு துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

Similar News