செய்திகள்

ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக துருக்கியில் மாபெரும் பேரணி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

Published On 2016-08-07 23:13 GMT   |   Update On 2016-08-07 23:30 GMT
துருக்கியில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாபெரும் பேரணி இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது.
இஸ்தான்புல்:

துருக்கியில் கடந்த மாதம் 15-ம்தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை அகற்ற முயன்றனர். ஆனால் அந்த ராணுவ புரட்சியை எர்டோகனின் ஆதரவாளர்கள் முறியடித்தனர். இதில் புரட்சிப்படையைச் சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகனின் ஆதரவாளர்கள் 208 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாபெரும் பேரணி இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

இதில் ஆளும் கட்சி உட்பட பல்வேறு தரப்பினரை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அனைவரும் துருக்கி நாட்டின் தேசிய கொடியினை ஏந்திய வண்ணம் இஸ்தான்புல் நகரில் கூடினர். 15 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஜனநாயகம் மற்றும் தியாகிகள் பேரணி என்று இது அழைக்கப்படுகிறது. இதில் மதத் தலைவர்கள் மற்றும் மூன்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த இரண்டு பேர் கலந்து கொண்டனர். குர்தீஸ் ஆதரவு மக்கள் ஜனநாயக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

இதுபோன்ற மாபெரும் கூட்டம் இஸ்தான்புல் நகரில் நடைபெற்று பார்த்ததில்லை என்று துருக்கி ஊடகங்கள் இதனை வர்ணித்துள்ளது.

Similar News