மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த தொண்டர்கள்
- விமான நிலையம் அருகில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
- மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற ஓ.பன்னீர்செல்வம் காருடன் 100-க்கும் மேற்பட்ட கார்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.
மதுரை:
தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எழுந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்திலும் குழப்பம் நீடித்தது. அடுத்த நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை வந்தார். அங்கிருந்து சொந்த ஊர் செல்வதற்காக இன்று மதியம் விமானம் மூலம் மதுரை வந்தார்.
அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது மாலைகள், சால்வைகள் அணிவித்தனர். விமான நிலையம் அருகில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் பன்னீர்செல்வம் வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.
ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி மதுரையில் அவரை வரவேற்று பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.
மதுரையில் விமான நிலையம், டோல்கேட், உசிலம்பட்டி ஆகிய 3 இடங்களிலும், தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டியில் 2 இடங்களிலும், தேனி, பெரியகுளம் ஆகிய இடங்களிலும் தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற ஓ.பன்னீர்செல்வம் காருடன் 100-க்கும் மேற்பட்ட கார்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.
இதையொட்டி மதுரை விமான நிலைய பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.