தமிழ்நாடு

நண்பர்களுடன் குளித்தபோதுஅலை இழுத்து சென்ற பள்ளி மாணவன்

Published On 2023-08-21 07:19 GMT   |   Update On 2023-08-21 07:19 GMT
  • கடந்த சனிக்கிழமை அருள் தனது நண்பர்கள் யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.
  • விடுமுறை நாளில் கடற்கரைக்கு சென்று விளையாடிய போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த அருளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

சென்னை:

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அருள் (14) என்ற மாணவன் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை அருள் தனது நண்பர்கள் யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

பின்னர் கடலில் இறங்கி 3 பேரும் குளித்து விளையாடினர். அப்போது வந்த ராட்சத அலையில் 3 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

மாணவர்கள் கூச்சல் போட்டதை பார்த்து பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மீட்பு படையினர் அந்த பகுதியில் தேடிய போது யோகேஸ்வரனும் தர்ஷனும் கடல் அலையில் சிக்கி தவித்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் மீட்டனர். அருள் மட்டும் காணவில்லை.

மாணவரை கடலோர காவல் படையினர் தேடினர். நேற்று ஹெலிகாப்டர் உதவியுடன் அருளை தேடினர். முகத்துவாரம் முதல் அண்ணா சதுக்கம் வரையில் தேடினர். ஆனாலும் அருள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அருளின் உடல் மெரினா கடற்கரைப் பகுதியில் இன்று ஒதுங்கியதை கடலோர காவல் படையினர் பார்த்தனர். அவரல் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

விடுமுறை நாளில் கடற்கரைக்கு சென்று விளையாடிய போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த அருளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

Tags:    

Similar News