தமிழ்நாடு

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு வீடு, கல்லூரிகளில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை

Published On 2023-11-04 04:02 GMT   |   Update On 2023-11-04 04:02 GMT
  • அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
  • திருவண்ணாமலையில் உள்ள காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் அலுவலகங்கள், அமைச்சரின் முகாம் அலுவலகம், வீடு ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் களத்தில் இறங்கி சோதனையில் ஈடுபட்டனர். இரவு விடிய விடிய சோதனை நடந்தது. இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது.

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை வந்திருந்தார். அவர் இருந்தபோதே வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

திருவண்ணாமலையில் திண்டிவனம் ரோட்டில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ. வே.கம்பன் வீடு உள்ளது. இங்கு நேற்று மாலை வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல திருவண்ணாமலையில் உள்ள காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமைச்சருக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News