வேடசந்தூர் அருகே கள்ளக்காதலியை வெட்டிகொன்ற வாலிபர்
- கவுசிக்பாண்டி மற்றும் பாண்டீஸ்வரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- திண்டுக்கல் பகுதியில் சுற்றித்திரிந்தபோது சந்தேகமடைந்த போலீசார் பிடித்து விசாரித்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூலாங்குளத்தை சேர்ந்தவர் கவுசிக்பாண்டி. திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டீஸ்வரி(30). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கவுசிக்பாண்டியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் கணவன்-மனைவிபோல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தகராறு தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு கவுசிக்பாண்டி மற்றும் பாண்டீஸ்வரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கவுசிக்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாண்டீஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாண்டீஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனைதொடர்ந்து கவுசிக் பாண்டி அங்கிருந்து தப்பிச்சென்றார். அவர் திண்டுக்கல் பகுதியில் சுற்றித்திரிந்தபோது சந்தேகமடைந்த போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது பெண்ணை கொன்றுவிட்டு தப்பிவந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து கவுசிக்பாண்டியை அவர்களிடம் திண்டுக்கல் போலீசார் ஒப்படைத்தனர்.
கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு உடலை அப்பகுதியில் சாக்குபையில் கட்டி சாலையோரம் வீசி சென்றுள்ளார். இதனைதொடர்ந்து போலீசார் கவுசிக்பாண்டியை சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.