மாடு திருடிய வழக்கில் 58 ஆண்டுகளுக்கு பின்னர் 77 வயது முதியவர் கைது
- ஜாமீனில் வெளியே வந்த இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகினர்.
- 58 ஆண்டுக்கு பின்னர் கணபதி விட்டலை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கியை சேர்ந்தவர் மல்லிதராவ் குல்கர்னி. விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு சொந்தமான 2 எருமை மாடுகள், ஒரு கன்றுக்குட்டியை மர்மநபர்கள் திருடினர்.
இதுதொடர்பாக பால்கி மகாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கிஷன் சந்தர், கணபதி விட்டல் வாக்மோர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்தது கடந்த 1965-ம் ஆண்டு. கைதான இருவருக்கும் அப்போது வயது 20. இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகினர்.
இவர்களில் முதல் குற்றவாளியான கிஷன் சந்தர் 2006-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதுபற்றி அறிந்த மகாகர் போலீசார், 2-வது குற்றவாளியான கணபதி விட்டல் வாக்மோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவரை மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் அருகே தகலகான் கிராமத்தில் கைது செய்தனர். இப்போது கணபதி விட்டலுக்கு வயது 77 ஆகும். 58 ஆண்டுக்கு பின்னர் கணபதி விட்டலை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.