தமிழ்நாடு

திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியர் உடல் உறுப்புகள் தானம்

Published On 2023-11-22 11:04 GMT   |   Update On 2023-11-22 11:04 GMT
  • நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் சென்ற போது மாடு குறுக்கே வந்துள்ளது.
  • நிலைதடுமாறிய சதீஷ்குமார் சாலையில் கீழே விழுந்தார்.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு வடக்கு தெருவை சேர்ந்த தங்கபெருமாள் மகன் சதீஷ் (வயது33). இவர் பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 மாத ஆண்குழந்தை உள்ளது.

சதீஷ்குமார் பள்ளிக்கு, பள்ளி வாகனத்தில் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றுள்ளார். வேலை முடிந்த பின்னர் பரமன்குறிச்சி வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்றார்.

அவர் நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் சென்ற போது மாடு குறுக்கே வந்துள்ளது. அப்போது நிலைதடுமாறிய சதீஷ்குமார் சாலையில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்ததால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சதீஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். நெல்லை மருத்துவமனையில் அவரது இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அவரது இதயம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது.

தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் உறுப்புகள் தானத்தை வலியுறுத்தி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்கள் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தற்போது உடல் உறுப்புகள் தானம் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News