தமிழ்நாடு

ஆம்பூர் அருகே திருவிழா உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி திடீர் உயிரிழப்பு

Published On 2022-07-20 07:21 GMT   |   Update On 2022-07-20 07:21 GMT
  • 4 பேரும் ஆம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றனர்.
  • காமராஜ், பூமிகா ஜோதிகா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் காமராஜ். தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி மாலதி. தம்பதிக்கு பூமிகா, ஜோதிகா, காமாட்சி (11) என 3 மகள்கள் இருந்தனர். காமாட்சி அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 17-ம் தேதி மாலதியின் தாய் வீட்டில் திருவிழா நடந்தது. காமராஜ் அவரது மனைவி மாலதி மற்றும் 3 பெண் குழந்தைகள் திருவிழாவில் கலந்து கொண்டு மாலதியின் தாய் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டனர். நேற்று முன்தினம் தங்களது வீட்டிற்கு வந்தனர். அப்போது முதல் காமராஜ் அவரது 3 மகள்களுக்கும் தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து 4 பேரும் ஆம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றனர். தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் நேற்று இரவு காமராஜ் உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காமாட்சி பரிதாபமாக இறந்தார். மேலும் காமராஜ், பூமிகா ஜோதிகா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவில் உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி வயிற்றுப்போக்கால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News