தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வராததால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்

Published On 2023-10-12 08:32 GMT   |   Update On 2023-10-12 08:32 GMT
  • தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்து வருகிறது.
  • வடகிழக்கு திசையை நோக்கி காற்று வீசத்தொடங்கும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 18-ந்தேதி வாக்கில் தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் தாமதமாக இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை தாமதகமாக தொடங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. தென்மேற்கு பருவமழை இன்னும் முடிவடையாததே வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை வருகிற 15-ந்தேதி முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு வடகிழக்கு திசையை நோக்கி காற்று வீசத்தொடங்கும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். காற்றின் திசையானது இந்த மாதம் கடைசி வாரத்தில் மாற வாய்ப்புள்ளது. எனவே இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

1984-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் முன்னதாகவே அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 1988, 1992, 2000 ஆகிய ஆண்டுகளில் மிகவும் தாமதமாக நவம்பர் 2-ந்தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News