சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற 1 லட்சம் பேர் மறுவாழ்வு அடைந்தனர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- இன்னுயிர் காப்போம் திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு முன்னோடி திட்டமாகும்.
- இன்று வரை இன்னுயிர் காப்போம் இத்திட்டத்தால் ஒரு லட்சம் நோயாளிகளின் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 'இன்னுயிர் காப்போம்' திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் காயம் அடையக்கூடியவர்களை உடனடியாக மீட்டு அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதாகும்.
தனியார் மருத்துவமனையில் முதல் 48 மணிநேர அனைத்து மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சமாவது நோயாளி காஞ்சிபுரம் மாவட்டம் சவீதா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சென்று சந்தித்து பழங்கள் கொடுத்து நலம் விசாரித்தார்.
பின்னர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இன்னுயிர் காப்போம் திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு முன்னோடி திட்டமாகும். இன்று வரை இத்திட்டத்தால் ஒரு லட்சம் நோயாளிகளின் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரியில் 90,113 பேரும், தனியார் மருத்துவமனையில் 9,948 பேரும் பயன் அடைந்துள்ளனர். இதற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ.90 கோடியே 19 லட்சமாகும். உயிர் காக்கும் 81 மருத்துவ முறைமைகள் மேற்கொள்ள வழிவகை செய்யும் திட்டம் இது. இத்திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்.
வெளிநாட்டவர், வெளி மாநிலத்தவர் என்ற எவ்வித பாகுபாடின்றி சாலை விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு லட்சமாவது நோயாளியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசியபோது அவருக்கு அக்குடும்பத்தினர் நன்றியை தெரிவித்தனர். அமைச்சருடன் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.