தமிழ்நாடு

அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Published On 2022-07-30 02:50 GMT   |   Update On 2022-07-30 02:50 GMT
  • தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.
  • விடுதிகளுடன்கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம்.

சென்னை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்து அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார், 3 அரசு டாக்டர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, 'மறு பிரேத பரிசோதனை முடிந்து, மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் இறுதிச்சடங்கு செய்யப்பட்டுவிட்டது. அது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை ஆவணங்கள் ஆய்வுக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட உள்ளன' என்று கூறினார்.

பின்னர், இதுகுறித்து மூடி முத்திரையிடப்பட்ட உறையில் ஒரு அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அசன் முகமது ஜின்னா கூறியதாவது:-

டி.ஐ.ஜி. தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூடியூப் சேனல்கள், 31 டுவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகள் போலீஸ் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தற்போது மாணவியின் மரணம், பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் ஆகிய இரு வழக்குகளையும் தனித்தனியாக போலீசார் விசாரிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் போலீசாரிடம் இல்லை. தமிழக அரசால் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 27-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமையைச் சரிசெய்ய 2 வாரங்கள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நீதிபதி, 'இதே நிலை நீண்டநாட்கள் தொடரக்கூடாது. விரைவில் பள்ளியை திறந்து வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடுதிகளுடன்கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம். இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடாது. இம்மாதிரியான சம்பவத்தை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவது, அதைப் பார்க்கும் மற்ற மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கிறது என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மாணவர்களை படிக்கும் எந்திரமாக மட்டும் மாற்றாமல் அவர்களுக்கான சிறந்த வெளிப்புறச் சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும்' என்று கூறினார்.

பின்னர், 'போலீஸ் விசாரணைக்கு இடையூறாக உள்ள யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறிய நீதிபதி, விசாரணையை ஆகஸ்டு 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News