மதுபான கொள்கை முறைகேடு வழக்கு- டெல்லி உள்பட 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
- அமலாக்கத்துறை இதுவரை 103-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி இருந்தது.
- மதுபான விநியோகஸ்தர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை (2021-22-ம் ஆண்டு) அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை 103-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி இருந்தது. சி.பி.ஐ.யும் சோதனை நடத்தியது. இந்த நிலையில் மதுபான விற்பனை கொள்கை வழக்கு தொடர்பாக இன்று டெல்லி, பஞ்சாப், ஐதராபாத் உள்பட 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மதுபான விநியோகஸ்தர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களிடம் விசாரணை நடத்தியபோது கிடைத்த சில தகவல்கள் அடிப்படையில் இச்சோதனையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சோதனை தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, "500-க்கும் மேற்பட்ட சேதனைகள், 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான ஆதாரங்களை கண்டறிய 3 மாதங்களாக 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். அவர் எதுவும் செய்யாததால் எதுவும் கிடைக்கவில்லை" என்றார்.