தமிழ்நாடு

பஸ்சில் ஓசி பயணம் மேற்கொள்ள மாட்டேன் என கூறி கண்டக்டருடன் வாக்குவாதம் செய்த மூதாட்டி

ஓசி டிக்கெட் வேண்டாம் என மூதாட்டி வாக்குவாதம்- அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளித்த தி.மு.க.

Published On 2022-09-30 05:55 GMT   |   Update On 2022-09-30 05:55 GMT
  • மூதாட்டி பிரீயா கொடுக்கும் டிக்கெட் எனக்கு வேண்டாம். என்னிடம் காசை பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடு என்றார்.
  • மூதாட்டியை வேண்டும் என்றே அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் கேட்டு தகராறு செய்யுமாறு சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.

கோவை:

கோவை காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் இந்த பஸ் காந்திபுரத்தில் இருந்து பாலத்துறையை நோக்கி புறப்பட்டது. பஸ்சில் வால்பாறையை சேர்ந்த வினித் கண்டக்டராக இருந்தார்.

இந்த பஸ் மதுக்கரை மார்க்கெட் அருகே வந்தபோது பஸ்சில் 70 வயது மூதாட்டி ஒருவர் ஏறினார். இந்த பஸ்சில் பயணிக்க பெண்களுக்கு டிக்கெட் இலவசம் என்பதால், பஸ்சில் ஏறியதும் மூதாட்டிக்கு கண்டக்டர் இலவச டிக்கெட்டை கிழித்து கொடுத்தார்.

அப்போது அந்த மூதாட்டி டிக்கெட்டுக்கான பணத்தை கண்டக்டரிடம் நீட்டினார். அதற்கு அவர் இந்த பஸ்சில் பெண்களுக்கு இலவசம். எனவே பணம் வேண்டாம் என மறுத்தார்.

ஆனால் மூதாட்டி விடாப்பிடியாக தொடர்ந்து கண்டக்டரிடம், நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன். நான் டிக்கெட்டுக்கு பணம் தருவேன். காசு இல்லாம தரும் டிக்கெட் எனக்கு வேண்டாம் என அடம் பிடித்தார்.

கண்டக்டர் மீண்டும் முயற்சி செய்து மூதாட்டியிடம் டிக்கெட்டை நீட்டினார். ஆனால் மூதாட்டி தமிழ்நாடு முழுவதும் பிரீயா போகட்டும். நான் பிரீயா போக மாட்டேன். பிரீயா கொடுக்கும் டிக்கெட் எனக்கு வேண்டாம். என்னிடம் காசை பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடு என்றார்.

கண்டக்டர் பணம் வாங்க மறுத்தார். ஆனால் மூதாட்டி வலுக்கட்டாயமாக கண்டக்டரின் கையில் பணத்தை திணித்தார்.

இதையடுத்து கண்டக்டர் வேறுவழியில்லாமல் மூதாட்டியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் மற்றும் மீதி சில்லரையை கொடுத்து சென்றார்.

இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். தற்போது அந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மூதாட்டியை வேண்டும் என்றே அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் கேட்டு தகராறு செய்யுமாறு சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மதுக்கரை போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில், மதுக்கரை பகுதி தி.மு.க.வி.னர் புகார் மனு அளித்துள்ளனர்.

மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் 2 பேர் வேண்டுமென்றே துளசியம்மாள் என்ற மூதாட்டியை பஸ்சில் வரவழைத்து பெண்களுக்கு இலவச டிக்கெட் என்றும் தெரிந்தும், கண்டக்டரிடம் சண்டை போட வைத்துள்ளனர்.

மேலும் தற்போதைய தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு வீடியோ காட்சிகளை எடுத்து, அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News