தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தடை

Published On 2022-08-03 04:27 GMT   |   Update On 2022-08-03 04:27 GMT
  • கடனா அணையின் நீர்மட்டம் நேற்று 66.80 அடியாக இருந்த நிலையில் இன்று 70 அடியாக உயர்ந்துள்ளது.
  • பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்து 75.30 அடியானது.

தென்காசி:

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்யும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் இன்று 3-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அந்த பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இன்னும் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் நேற்றும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி குண்டாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 7 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அந்த அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி 3 மாதங்களாக நிரம்பி வழிகிறது.

மேக்கரை அடவிநயினார் அணையில் 23 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 132 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 96.50 அடி நீர் இருப்பு உள்ளது. நேற்றில் இருந்து சுமார் 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதேபோல் கடனா அணையின் நீர்மட்டம் நேற்று 66.80 அடியாக இருந்த நிலையில் இன்று 70 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 352 கனஅடி நீர் கொட்டி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று மழை குறைந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. எனினும் அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் வரத்து இருந்தது. 143 அடி கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 3,399 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்து 75.30 அடியானது. இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை கடந்தது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 100.56 அடியாக உள்ளது.

Tags:    

Similar News