தமிழ்நாடு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தள்ளிவைப்பு

Published On 2022-06-22 06:11 GMT   |   Update On 2022-06-22 06:11 GMT
  • மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
  • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் முதலில் ஜூன் 17-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.

சென்னை:

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்ட முயற்சி செய்யும் மேகதாது அணை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அதோடு இந்த கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி குழுவையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி அனுப்பி உள்ளார். என்றாலும் கர்நாடக அரசு தனது முடிவில் தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தள்ளி வைப்பதாக அதன் தலைவர் ஹல்தர் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்தமாதம் (ஜூலை 6-ந்தேதி) கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் முதலில் ஜூன் 17-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. அது 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக மீண்டும் இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News