தமிழ்நாடு

அம்மா உணவகங்களில் சப்பாத்தி தொடர்ந்து வழங்கப்படும்- மாநகராட்சி அதிகாரி தகவல்

Published On 2022-07-03 06:10 GMT   |   Update On 2022-07-03 06:10 GMT
  • சென்னையில் செயல்படும் 400 அம்மா உணவகங்களிலும் வழக்கம்போல் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • அம்மா உணவங்களில் சப்பாத்தியை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை.

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழை-எளிய மக்கள் பசியாற கடந்த 2013-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகங்களை திறந்தார்.

இங்கு குறைந்த விலையில் இட்லி, சப்பாத்தி, பொங்கல், கலவை சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

ஆரம்பத்தில் அம்மா உணவகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் சென்னையில் அம்மா உணவகங்கள் பல இடங்களில் தொடங்கப்பட்டது. இப்போது 400 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

இவற்றால் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும் பலர் குறைகூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சென்னையில் செயல்படும் 400 அம்மா உணவகங்களிலும் வழக்கம்போல் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கோதுமை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் இருந்ததால் சப்பாத்தி தயாரிப்பது தடைபட்டது. அதன் பிறகு அதனை சரி செய்து மீண்டும் சப்பாத்தி வழங்கினோம்.

சில நாட்களுக்கு முன்பு சப்பாத்தி மாவு மிஷின் ரிப்பேர் ஆனது. அதையும் சரிசெய்து தடையின்றி சப்பாத்தி தயாரித்து வழங்குகிறோம். எனவே அம்மா உணவங்களில் சப்பாத்தியை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை. சிலர் வதந்தியை கிளப்பி வருகிறார்கள்.

அம்மா உணவகங்களை கண்காணிக்கவும், தரமான உணவு வழங்குவதற்காகவும் மாநகராட்சியில் தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News