தமிழ்நாடு
பிளஸ்-1 மாணவர் கொலை

இன்று கடைசி தேர்வு எழுத இருந்த நிலையில் பிளஸ்-1 மாணவர் படுகொலை

Published On 2022-05-23 06:15 GMT   |   Update On 2022-05-23 06:15 GMT
ஜெயங்கொண்டம் அருகே பிளஸ்-1 மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மதிழயகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லலிதா.

இந்த தம்பதிக்கு முருகன், மணிகண்டன் (வயது 16) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதற்கிடையே கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே லலிதா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இதையடுத்து மதியழகன் மனைவி இறந்த 2 ஆண்டுகளில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஊரை காலிசெய்து விட்டு சென்றார். இதனால் அவரது மகன்களான முருகன் அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டிலும், மணிகண்டன் பொற்பதிந்தநல்லூரில் உள்ள தனது பாட்டி பாப்பாத்தி வீட்டிலும் வளர்ந்து வந்தனர்.

இதற்கிடையே பாப்பாத்தி தனது பேரன் மணிகண்டனை படிக்க வைக்கும் ஆவலுடன் அவரை அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தார். அங்கு அவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். தற்போது பிளஸ்-1 பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாக இருந்தததால் பொற்பதிந்தநல்லூருக்கு வந்த மணிகண்டன், இன்று நடைபெறும் கடைசி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

நேற்று இரவு பாட்டி வீட்டிற்கு அருகிலுள்ள தனது பூர்வீக வீட்டில் இரவு நீண்ட நேரம் வரை படித்து விட்டு தூங்க சென்றார். இந்தநிலையில் இன்று காலை அவர் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை.

இதனால் பதட்டம் அடைந்த பாட்டி பாப்பாத்தி அங்கு சென்றபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே பார்த்தபோது, மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் யாரோ மர்ம நபர்கள் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.

அலறித்துடித்த பாப்பாத்தியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தா.பழுர் போலீசார் கொலையுண்ட மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மணிகண்டனை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. அவருக்கு பிரச்சினைகள் ஏதாவது இருந்ததா, யாராவையாது காதலித்தாரா அல்லது சொத்து தகராறில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இன்று கடைசி தேர்வு எழுத இருந்த நிலையில் பிளஸ்-1 மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News