தமிழ்நாடு
திருமணம் ஆனதை மறைத்து என்ஜினீயரை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்த பெண்
திருமணம் ஆனதை மறைத்து என்ஜினீயரை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்த பாளையங்கோட்டை பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் நேற்று மாலை நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவர் அங்கு ஒரு பெண்ணை தாக்கி உள்ளார்.
இதைப்பார்த்த பயணிகள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் என்ஜினீயரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அந்த பெண்ணுக்கும், என்ஜினீயருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனதும், சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்துடன் அந்த பெண் நெல்லைக்கு தப்பி வந்துவிட்டதாகவும் என்ஜினீயர் கூறினார்.
இதனால் தான் நெல்லை வந்து விசாரித்த போது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனதும், அவருக்கு 2 மகள்கள் இருப்பதும் தெரிய வந்ததாக கூறிய என்ஜினீயர், அதனை மறைத்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக போலீசாரிடம் புகார் கூறினார்.
மேலும் வீட்டில் இருந்து எடுத்து வந்த பணத்தை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அந்த பெண் தாக்கப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.