தமிழ்நாடு
தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.2.16 கோடி பறிமுதல்
நாமக்கலில் 33 இடங்கள், சென்னையில் 14 இடங்கள், ஈரோட்டில் 8 இடங்களில், சேலத்தில் 4 இடங்கள், கோவை, கரூரில் தலா 2 இடங்களில் சோதனை நடைபெற்றது.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியின்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 69 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணம், 1 கிலோ 130 கிராம் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
செல்போன்கள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கலில் 33 இடங்கள், சென்னையில் 14 இடங்கள், ஈரோட்டில் 8 இடங்களில், சேலத்தில் 4 இடங்கள், கோவை, கரூரில் தலா 2 இடங்களில் சோதனை நடைபெற்றது. தங்கமணி மகன் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. ஆவணங்கள் உள்ள கைப்பை ஒன்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கிருந்து எடுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.