செய்திகள்
தஞ்சையில் ஷேர்ஆட்டோவில் மூதாட்டியிடம் 8 பவுன் நகை திருட்டு
தஞ்சையில் ஷேர்ஆட்டோவில் மூதாட்டியிடம் 8 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமாநகரை சேர்ந்தவர் சோலையப்பன். இவருடைய மனைவி பத்மாவதி (வயது65). சம்பவத்தன்று இவர் தனது பேத்தியுடன் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். தஞ்சை சீனிவாசம்பிள்ளை சாலையில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் ஷேர்ஆட்டோ சென்றபோது தனது கைப்பையை பத்மாவதி பார்த்தபோது அவற்றை காணவில்லை.
இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் 8 பவுன் நகை இருந்தது. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த சக பயணிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கைப்பையை பார்க்கவில்லை என கூறினர். ஷேர் ஆட்டோ முழுவதும் தேடி பார்த்தும் நகை இருந்த பை கிடைக்கவில்லை. மர்மநபர்கள் பையில் நகை இருப்பதை அறிந்து திருடிக் கொண்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.