செய்திகள்
கோப்பு படம்

கொரோனா பரவல் எதிரொலி: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள்

Published On 2021-05-28 10:27 GMT   |   Update On 2021-05-28 10:27 GMT
கிராம கூட்டம் நடத்தப்பட்டு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என ஏகமனதாக முடிவு செய்தோம். ஆகவே இந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்வதில்லை என்றார்.

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்குக்கு பின்னரும் வேகமாக பரவி வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

கீழக்கரை அருகே உள்ள முத்துப்பேட்டை, பெரியபட்டினம், தெற்கு புது குடியிருப்பு, களிமண்குண்டு போன்ற கடலோர கிராமங்களில் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

தற்போது மீனுக்கு நல்ல விலை கிடைத்த நிலையிலும் கிராம மக்களின் நலன் கருதி கடலுக்கு செல்லக்கூடாது என முடிவு செய்யப்பட்டு கடலுக்கு செல்லாமல் வாழ் வாதாரம் இழந்த நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து களிமண் குண்டு முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜூ கூறுகையில், சில தினங்களுக்கு முன்பு வரை கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தோம். ஆனால் மீன்களை வாங்கு வதற்கு வெளியூரில் இருந்து ஏராளமான வியாபாரிகள் குவிந்து விடுவதால் கிராமத்தில் கொரோனா பரவும் அபாயம் காணப்பட்டது.

இதையடுத்து கிராம கூட்டம் நடத்தப்பட்டு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என ஏகமனதாக முடிவு செய்தோம். ஆகவே இந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்வதில்லை என்றார்.

தற்போது கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தால் கூடுதல் விலை கிடைக்கும். கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற நிலை இருந்த நிலையிலும் மீனவர்கள் வருமானத்தை எதிர்நோக்காமல் கொரோனாவின் பரவலை உணர்ந்து மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது ஆகும்.

Tags:    

Similar News