செய்திகள்
மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டவர்கள்

கொட்டாம்பட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடி திருவிழா

Published On 2021-04-12 10:08 GMT   |   Update On 2021-04-12 10:08 GMT
பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொட்டாம்பட்டி அருகே உள்ளது குன்னாரம்பட்டி. இங்கு பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடந்தது.

அங்குள்ள ராஜனேரி கண்மாய் 10 வருடங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவ மழையால் கடந்தாண்டு நிரம்பியது.

தற்போது விவசாய பணி முடிந்து கோடை காலம் தொடங்கி தண்ணீர் வற்றிய நிலையில் கண்மாயில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீன்பிடி திருவிழா நடந்தது.

அதிகாலையில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு சாதி, மத பேதமின்றி மீன்களை பிடிக்க இறங்கினர்.

இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றை பொதுமக்கள் உற்சாகமாக பிடித்தனர்.

இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து சாப்பிட்டார்கள்.

இதுபோன்று பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


Tags:    

Similar News