செய்திகள்
தற்கொலை செய்தவர்களை படத்தில் காணலாம்.

திருப்பூரில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-04-09 07:47 GMT   |   Update On 2021-04-09 07:47 GMT
ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் தற்கொலை செய்த சம்பவம் திருப்பூர் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 50), பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி செல்வி (47). இவர்களுக்கு அஸ்வின் (19) என்ற மகனும், அகல்யா(17) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 4பேரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ராகவன் உயிர் தப்பினார். செல்வி, அகல்யாவுக்கு ஒரு கை துண்டானது. அஸ்வினுக்கு கால் துண்டானது. இதையடுத்து அவர்களை ராகவன் பராமரித்து வந்தார்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராகவன் உடல் நலக்குறைவால் இறந்தார். இதனால் செல்வி, அஸ்வின், அகல்யா ஆகியோரை பராமரிக்க ஆள் இல்லை. இதன் காரணமாக அவர்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். ஊட்டியில் உள்ள செல்வியின் தங்கை மகாலட்சுமி அவ்வப்போது திருப்பூர் வந்து தேவையான உதவிகளை செய்து விட்டு சென்றார்.

இருப்பினும் 3 பேரும் மிகவும் மனவேதனையில் இருந்து வந்தனர். நேற்று செல்வி, மகாலட்சுமியை தொடர்பு கொண்டு எங்களால் இனியும் வாழ முடியாது. எனவே தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்து விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி உடனடியாக இன்று காலை திருப்பூருக்கு விரைந்து வந்தார்.

செல்வி வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு செல்வி, அஸ்வின், அகல்யா ஆகிய 3 பேரும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர். அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி இது குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் 3பேரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் முடங்கிய அவர்களை பராமரிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அஸ்வினுக்கு கால் துண்டானதால் செல்வி அஸ்வினை முதலில் தூக்கில் தொங்கி விட்டு கொன்று அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் தற்கொலை செய்த சம்பவம் திருப்பூர் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News