செய்திகள்
கொலை

திருப்பத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்: கழுத்தை அறுத்து மனைவி படுகொலை

Published On 2021-02-16 13:14 GMT   |   Update On 2021-02-16 13:14 GMT
திருப்பத்தூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய அவருடைய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா மிட்டூர் அருகே உள்ள ஏரிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு என்ற ரவி (வயது 50) விவசாயி. இவருடைய மனைவி ரஞ்சிதம் (45). கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதன்படி நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

ரஞ்சிதத்துக்கும், மற்றொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவருடைய நடத்தையில் ரகு சந்தேகப்பட்டுள்ளார். இதனால் நேற்று இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த ரகு, மனைவி ரஞ்சிதத்தை அடித்துள்ளார். மேலும் தான் வாங்கி வைத்திருந்த கத்தியால் ரஞ்சிதத்தின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரஞ்சிதம் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

கழுத்தை அறுத்தபோது ரஞ்சிதம் கூச்சல் போட்டுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். அதற்குள் ரகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அங்கு, ரஞ்சிதம் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரஞ்சிதத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரகுவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News