செய்திகள்
தலைமைச் செயலாளர் சண்முகம்

சொத்து விவரங்களை 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்- ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு, தலைமைச்செயலாளர் உத்தரவு

Published On 2021-01-19 02:12 GMT   |   Update On 2021-01-19 02:12 GMT
மத்திய அரசு அறிவிப்பையடுத்து, சொத்து விவரங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம், அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியில் உள்ளவர்கள் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை ‘ஆன்லைன்' (இணையவழி) முறையில் தெரிவிக்கும் முறை கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

அந்தவகையில் இந்த ஆண்டு வருகிற 31-ந்தேதிக்குள், இணையவழியில் உள்ள படிவத்தை நிரப்பி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுடைய அசையாத சொத்து விவரங்களை தெரிவிக்கவேண்டும். சரியான காரணம் இன்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது கையால் நிரப்பப்பட்ட படிவங்களை ‘ஸ்கேன்' செய்தோ இணையதளம் மூலமாக அனுப்பவேண்டும். ஆன்லைன் முறையில் அனுப்புவதற்கான வசதி, வருகிற 31-ந்தேதிக்கு பின்னர் தானாகவே காலாவதியாகிவிடும்.

எனவே மத்திய அரசு அறிவித்த முறையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுடைய அசையாத சொத்து விவரங்களை இம்மாதம் 31-ந்தேதிக்குள் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கவேண்டும். இதன் நகலை மாநில அரசுக்கோ அல்லது பணியாளர் நலத்துறைக்கோ அனுப்பவேண்டிய தேவை இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News