செய்திகள்
கொலை

பள்ளி மாணவன் அடித்துக் கொலை- வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2020-10-22 02:18 GMT   |   Update On 2020-10-22 02:18 GMT
மாயமான பள்ளி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் தேவன்ராஜ் (வயது 13). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ளதால் தேவன்ராஜ் வீட்டில் இருந்து வந்தான். அவன் தனக்கென்று தனியாக செல்போன் வைத்திருந்தான். அதில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது, டிக்-டாக் சமூக வலைதளத்தில் பாடல்களுக்கு நடனமாடி பகிர்வது வழக்கம்

கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன் அதன்பின் திரும்பி வரவில்லை. இதனால் கவலை அடைந்த அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் மகனை பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

இதையடுத்து மகனை கண்டுபிடிக்குமாறு மரக்காணம் போலீசில் கோவிந்தராஜ் புகார் செய்தார். அதன்பேரில் காணவில்லை என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் குறிஞ்சி செல்வன் மற்றும் போலீசார் தேவன்ராஜை தேடி வந்தனர். மாணவன் வைத்திருந்த செல்போனை தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. அவனது செல்போன் எண்ணை வைத்து விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது தேவன்ராஜுக்கு நொச்சிக்குப்பத்தை சேர்ந்த அபினேஷ் (22) என்ற வாலிபர் கடைசியாக செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அபினேசை பிடித்து போலீசார் விசாரித்தபோது தேவன்ராஜை அடித்து கொலை செய்து, நொச்சிக்குப்பம் கடற்கரையோரம் உள்ள சவுக்குத் தோப்பில் புதைத்த திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

தேவன்ராஜ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அபினேஷை நேற்று மாலை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது பலத்த மழை பெய்ததால் அந்த பகுதி சேறும் சகதியுமாக இருந்தது. மேலும் இரவு நேரம் என்பதால் இடத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அபினேஷ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தேவன்ராஜ் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை மாஜிஸ்திரேட்டு, தாசில்தார் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மாணவன் தேவன்ரானை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து அபினேசிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காணாமல் போன மகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து தேவன்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவன் மாயமானதாக கருதப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News