செய்திகள்
ரேஷன் கடையில் சர்வர் இணைப்பு கிடைப்பதில் தாமதம்
காங்கேயம் பகுதியில் ரேஷன் கடைகளில் சர்வர் இணைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காங்கேயம்:
தமிழகம் முழுவதும் தற்போது ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரரின் கைவிரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் மூலம் கைரேகை பதியப்பட்டு பொருட்கள் வழங்குவதில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளது.
பொருட்கள் வழங்க கார்டை ஸ்கேன் செய்யும் எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யும்போதும், கைவிரல் ரேகை பதியும் போதும் சர்வர் உடன் இணைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், பொருட்கள் வழங்குவதில் அதிக நேரம் பிடிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதனால் பொருட்கள் வாங்கவரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பலர் பொருட்கள் வாங்காமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் நேரத்தில் அதிக இணைய தள பயன்பாடு காரணமாக ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் வழங்கும் எந்திரத்துக்கான இணைய இணைப்பு கிடைக்காமல் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் பல்வேறு கடைகளில் உள்ள கருவியில் கைரேகை பதிவாகவில்லை. பலமுறை முயன்றால் மட்டுமே ரேகை பதிவாகிறது. இதற்கு ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் ஆகிறது. ஒரு கடையில் 25 பேர் வரிசையில் பொருட்கள் வாங்கி செல்ல மதியம் ஆகி விடுகிறது. எனவே சேவையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.