செய்திகள்
ராஜாமணி அம்மாள்

தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.வின் தாயார் காலமானார்- இன்று உடல் அடக்கம்

Published On 2020-10-05 05:43 GMT   |   Update On 2020-10-05 05:43 GMT
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.வின் தாயார் நேற்று காலமானார். அவரது உடல் சொந்தஊரான விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
விருதுநகர்:

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசின் தாயாரும், மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மனைவியுமான ராஜாமணி அம்மாள் நேற்று மாலை காலமானார். இவருக்கு வயது 84. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை 6 மணிக்கு விருதுநகர் அருகே உள்ள சொந்த ஊரான மல்லாங்கிணறுக்கு திரும்பினார்.

இதையடுத்து மாலை 6.45 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் உயிர் பிரிந்தது. இவர் பிறந்த ஊர் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம்.

இவர் மல்லாங்கிணறில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். பணி ஓய்வு பெற்ற பிறகும் அவர் தொடர்ந்து மல்லாங்கிணறில் வசித்து வந்தார். இவருடைய மூத்த மகள் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆவார். ராஜாமணி அம்மாளின் காலமான செய்தி அறிந்த தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் அவரது உடலுக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. அவரது உடல் மல்லாங்கிணறில் உள்ள அவரது குடும்பத்துக்கு சொந்தமான தோட்டத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட உள்ளது. ராஜாமணி அம்மாளின் கணவர் தங்கப்பாண்டியன் கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி காலமானார்.

தனது கணவன் தங்கப்பாண்டியன், மகன் தங்கம் தென்னரசு ஆகியோர் அரசியலில் ஈடுபட முழு ஆக்கமும், ஊக்கமும் ராஜாமணி அம்மாள் கொடுத்து வந்தார். மேலும் அவர் மல்லாங்கிணறு மக்களின் நலனில் வாழ்நாள் முழுவதும் தனி கவனம் செலுத்தினார்.
Tags:    

Similar News