செய்திகள்
கலெக்டர் ஷில்பா

தூய்மை பாரத இயக்க திட்டத்தில் நெல்லை மாவட்டம் முதலிடம்- கலெக்டர் ஷில்பா தகவல்

Published On 2020-10-01 03:41 GMT   |   Update On 2020-10-01 03:41 GMT
இந்திய அளவில் தூய்மை பாரத இயக்க திட்டத்தில் நெல்லை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தற்போது முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் ஊரகப்பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

கழிவறைகள் கட்ட இடவசதி இல்லாத குடும்பங்கள், வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களில் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்காக பெண்கள், குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொது கழிவறைகள் பல்வேறு திட்டங்களில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளில் ஒன்றான சுகாதார ஊரகம் மற்றும் பொது கழிவறைகளின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பாக தேசிய அளவில் சிறந்த மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் இந்திய அளவில் முதல் மாவட்டமாக நெல்லை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.45 மணிக்கு மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷேகுவாட் காணொலிக்காட்சி மூலம் எனக்கு (கலெக்டர்) வழங்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News