செய்திகள்
பாலமலை

குடிபோதையில் தகராறு- மகனை கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி கைது

Published On 2020-08-10 07:58 GMT   |   Update On 2020-08-10 07:58 GMT
குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்து கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோவை:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் ஸ்ரீபாரதி நகரை சேர்ந்தவர் பாலமலை (வயது 67). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ரங்கம்மாள் (65). இவர்களுக்கு சரோஜினி (39) என்ற மகளும், தனபால் (37) என்ற மகனும் உள்ளனர். சரோஜினி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். தனபாலுக்கும், கோவையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதனால் தனபால் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனபால் தினமும் குடித்து விட்டு வந்து தனது பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாலமலை அருகில் கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்து தனபாலின் தலையில் ஓங்கி அடித்ததாக தெரிகிறது. இதில் தனபால் மயங்கி கீழே விழுந்தார். குடிபோதையில் தான் அவர் படுத்து விட்டதாக கருதி பாலமலையும் தூங்க சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் பாலமலை எழுந்து பார்த்த போது தனபால் இறந்து கிடந்தார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அவர் அய்யோ மகனே நானே அடித்து கொன்றுவிட்டேனே என்று கதறி அழுதார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தனபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தொழிலாளி பாலமலையை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் தகராறு செய்த மகனை, தந்தையே மரக்கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News