செய்திகள்
டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு லாரிகளில் மதுபான பெட்டிகளை ஏற்றி, இறக்குவதற்காக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 51 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கிடங்கு மேலாளர் தொழிலாளர்களிடம் மிகவும் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும், லாரிகளில் சரக்கு எடுத்து வருபவர்கள் வழங்கும் தொகையை தன்னிடம் வழங்குமாறு அவர் வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொழிலாளர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து டாஸ்மாக் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். இதையடுத்து மாவட்ட மேலாளர் பண்டரிநாதன், சங்க நிர்வாகிகளை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் எழாதவாறு பார்த்து கொள்கிறேன் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர்.