செய்திகள்
வாலிபர் கொலை

சமயபுரத்தில் போலீஸ் நிலையம் முன் வாலிபர் குத்திக்கொலை

Published On 2020-07-23 13:02 GMT   |   Update On 2020-07-23 13:02 GMT
சமயபுரம் போலீஸ் நிலையம் முன் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்த ராஜாவின் மகன் விக்னேஷ் (வயது 23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கமணிக்கும் (30) இடையே சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பூஜைக்கு தேவையான தேங்காய் பழத்தட்டுகளை விற்பனை செய்வதில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த விக்னேஷ், தங்கமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதுபற்றி புகார் கொடுக்க சமயபுரம் போலீஸ் நிலையத்துக்கு தங்கமணி சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டே விக்னேசும் சென்றுள்ளார்.

போலீஸ் நிலையம் முன் சென்று கொண்டிருந்த தங்கமணியிடம், விக்னேஷ் தொடர்ந்து தகராறு செய்யவே ஆத்திரம் அடைந்த தங்கமணி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் விக்னேசை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், போலீஸ் நிலையம் முன்பு ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமணியை கைது செய்தனர். போலீஸ் நிலையம் முன் நடந்த இந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News