செய்திகள்
டாஸ்மாக் கடை கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் ரூ.75 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு

Published On 2020-07-06 09:42 GMT   |   Update On 2020-07-06 09:42 GMT
உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே செம்மனந்தல் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் வசூலான ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு மணிகண்டன் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் மணிகண்டன் டாஸ்மாக் கடைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காணவில்லை.

அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது பற்றிய தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணிகண்டன் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரிந்தது. தொடர்ந்து மதுபாட்டில்கள் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மதுபாட்டில்கள் விற்றவகையில் வசூலான ரூ.2 லட்சத்தை மணிகண்டன் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றார். இதன் காரணமாக அந்த பணம் திருடுபோகாமல் தப்பியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News