செய்திகள்
சுடுகாட்டிற்கு செல்லும் பாதையைபடத்தில் காணலாம்.

அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆறு சுடுகாட்டுக்கு செல்ல பாலம் அமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-07-05 09:27 GMT   |   Update On 2020-07-05 09:27 GMT
அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆறு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சியில் நங்காஞ்சி ஆற்றின் கரையோரப்பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளது. இதன் சுற்று வட்டார பகுதிகளில் யாராவது இறந்தால், அவர்களின் உடலை நங்காஞ்சி ஆற்றைக் கடந்து மறுபக்கம் கரையோரத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், மழை காலங்களில் நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் வரும்போது அரவக்குறிச்சியில் யாராவது இறக்க நேரிட்டால், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்வது பெரும்பாடாகி விடும்.

காரணம், நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்போது இறந்தவர்களின் உடலை ஆற்றை தாண்டி மறுபக்கம் இருக்கும் சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல முடியாது. இதனால் பல மணிநேரம் காத்திருந்து ஆற்றில் நடந்து செல்லும் அளவிற்கு தண்ணீர் குறைந்தவுடன் தான் இறந்தவர் உடலை எடுத்துச்செல்ல முடியும்.

அதோடு மட்டுமல்லாமல் அரவக்குறிச்சியில் உள்ள கழிவுநீர் மற்றும் சிறு சாக்கடை கால்வாய்கள் அனைத்தும் நங்காஞ்சி ஆற்றுப் பகுதியிலேயே விடப்படுவதால், நங்காஞ்சி ஆற்றில் எந்நேரமும் சாக்கடை கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கும். ஆற்றில் தண்ணீர் இல்லாத நேரத்தில்கூட இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல வேண்டுமானால் கழிவுநீரை தாண்டி தான் செல்லவேண்டியுள்ளது.

எனவே நங்காஞ்சி ஆற்றுப்பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை அருகில் சிறு பாலம் அமைக்கவேண்டுமென்று இப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு சிறுபாலம் அமைத்தால் ஆற்றில் தண்ணீர் வரும் நேரங்களில் கூட சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்வதில் எந்தவித சிரமமும் இருக்காது என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
Tags:    

Similar News