செய்திகள்
கோப்பு படம்

காங்கயத்தில் சிறுமி தீக்குளித்து தற்கொலை - கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2020-02-24 10:38 GMT   |   Update On 2020-02-24 10:38 GMT
காங்கயத்தில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 25). இவருக்கு காங்கயத்தை சேர்ந்த சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதையடுத்து சிறுமி வேல்முருகனிடம் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் வேல்முருகன் திருமணம் செய்ய மறுத்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சிறுமி மனவேதனை அடைந்தார்.

வாழ்க்கையில் விரக்தியடைந்த சிறுமி கடந்த டிசம்பர் மாதம் வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் வேல்முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், வேல்முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திருப்பூர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேல்முருகனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை போலீசார் வழங்கினர்.
Tags:    

Similar News