செய்திகள்
தீர்ப்பு

தொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை - விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2020-02-19 17:07 GMT   |   Update On 2020-02-19 17:07 GMT
தொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த சொக்கம்பட்டு காலனி புதுநகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 35). தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த மகேந்திரகுமாரும்(34) நண்பர்களாவார்கள்.

மகேந்திரகுமாரின் வீட்டுக்கு அடிக்கடி சுந்தரமூர்த்தி சென்று வருவது வழக்கம். அப்போது மகேந்திரகுமாரின் மனைவி குணசுந்தரியுடன் சுந்தரமூர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த வி‌‌ஷயம் மகேந்திரகுமாருக்கு தெரியவந்தது.

இதனால் அவர் கடந்த 19.3.2013- அன்று சுந்தரமூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவரிடம், நீ ஏன் என் மனைவியிடம் அடிக்கடி பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் அதை உன் மனைவியிடமே கேட்டுக்கொள் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரகுமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரமூர்த்தியின் இடதுபக்க மார்பில் குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுந்தரமூர்த்தியை. அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுந்தரமூர்த்தி பரிதாபமாக செத்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஏழைமுத்து, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேந்திர குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமல செல்வன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி செங்கமல செல்வன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலவன் ஆஜரானார்.
Tags:    

Similar News