செய்திகள்
கைது

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்- பெண்கள் உள்பட 76 பேர் கைது

Published On 2020-02-17 17:28 GMT   |   Update On 2020-02-17 17:28 GMT
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி முற்றுகை போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 76 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை அந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் தலைவர் காந்தி தலைமையில் பனகல் ரோடு, திருவள்ளுவர் சிலை முன்பு திரண்டனர்.

அங்கிருந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டனர். அப்போது பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக் கோரி மத்திய-மாநில அரசை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

அப்போது அவர்களை மறித்த போலீசார் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை. கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர். ஆனால் அவர்கள் அதனையும் மீறி தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து பெண்கள் உள்பட 76 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News