வெள்ளகோவிலில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது பெண் குழந்தை பலி
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் இந்திரா நகரை சேர்ந்தவர் முனியப்பன். பெயிண்டர். அவரது மனைவி சந்திகா. இவர் கணியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் தமிழினி என்ற பெண் குழந்தையும் இருந்தது. நேற்று சந்திகா வேலைக்கு சென்று விட்டார். முனியப்பன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க சென்றார்.
நேற்று மாலை 5 மணிக்கு தமிழினி தனது தந்தையை பார்க்க சென்றார். அப்போது நீ வீட்டிற்கு போ. நான் உனக்கு மிட்டாய் வாங்கி வருகிறேன் என முனியப்பன் கூறி அனுப்பி உள்ளார்.
பின்னர் முனியப்பன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது தமிழினி அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தார். சந்தேகத்தின் பேரில் தான் வேலை செய்த வீட்டிற்கு சென்று அருகில் இருந்த தண்ணீர் தொட்டியை பார்த்தார்.
அந்த தொட்டி 7 அடி ஆழம் கொண்டது. அதில் 2 அடிக்கு தண்ணீர் இருந்தது. அதில் தமிழினி விழுந்து கிடந்தாள். அவளை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தமிழினியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.