செய்திகள்
லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி நசுங்கி இறந்து கிடக்கும் காட்சி.

மதுரை வைகை ஆற்றங்கரையில் தூங்கிய 3 தொழிலாளர்கள் பலி

Published On 2020-02-06 05:04 GMT   |   Update On 2020-02-06 05:04 GMT
மதுரை வைகை ஆற்றங்கரையில் தூங்கிய 3 தொழிலாளர்கள் பின் நோக்கி வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை:

மதுரை நகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் ‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு திட்டமான வைகை கரையை அழகு படுத்தும் திட்டத்துக்கு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக ஆழ்வார்புரம் வைகை ஆற்று ஓரத்தில் வைகை ஆற்றுக்கான தடுப்புகள் கட்டும் பணிக்காக கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது.

நேற்று இரவு வரை பணி நடந்தது. பின்னர் தொழிலாளர்கள் சிலர் ஆற்றங்கரை ஓரத்தில் லாரி அருகே தூங்கினர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை டிரைவர் ஆரோக்கியசாமி என்பவர் கான்கிரீட் கலவை எந்திரம் பொருத்தப்பட்ட லாரியை பின்நோக்கி நகர்த்தினார்.

அப்போது லாரிக்கு பின்னால் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய நிலையில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1) வெங்கடேஷ் (வயது 27), தந்தை பெயர் குப்பன். சேலம் எடப்பாடியைச் சேர்ந்தவர்.

2) பெரியசாமி (34), தந்தை பெயர் சின்ராசு, புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்.

3) பாபு (28), சென்னையைச் சேர்ந்தவர்.

உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கான்கிரீட் கலவை லாரியை பின்னால் நகர்த்திய டிரைவர் ஆரோக்கிய சாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம், புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆரோக்கிய சாமி லாரியை கவனக்குறைவாக இயக்கியதால் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணம் எதுவும் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News