செய்திகள்
பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட வாலிபர் செந்தில் தீக்காயங்களுடன் உள்ள படம்

கணவரை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற மனைவி

Published On 2019-12-11 06:52 GMT   |   Update On 2019-12-11 06:53 GMT
மதுகுடிக்க கால் கொலுசை அடகு வைத்த கணவரை மனைவி உயிருடன் எரித்து கொல்ல முயன்ற சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டமங்கலம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சித்ரா(33). இவர்களுக்கு வெற்றிவேல்(12), ஹரிஷ்(10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெற்றிவேல் 7-ம் வகுப்பும், ஹரிஷ் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். செந்திலுக்கு குடிபழக்கம் உண்டு. அவர் தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இந்தநிலையில் செந்தில் தனது மனைவி சித்ராவின் கால் கொலுசை வாங்கி அங்குள்ள கடையில் ரூ.2 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். அந்த பணத்தை அவர் மதுவாங்கி குடித்து விட்டார். இந்த விவரம் சித்ராவுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் கணவரிடம் தகராறு செய்தார். நேற்று இரவு செந்தில் வீட்டில் இருந்தார். அப்போது சித்ரா வீட்டு முன்பு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் எடுத்து வந்தார்.

பின்னர் உள்ளே இருந்த கணவர் செந்தில் மீது ஊற்றி தீ வைத்தார். உடலில் தீ பிடித்ததும் அவர் கூச்சல்போட்டு அலறினார். இதில் அவர் உடல் முழுவதும் தீயில் கருகியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலைமை மோசமாக உள்ளது.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குபதிவு செய்து தலைமறைவாகிவிட்ட சித்ராவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News