செய்திகள்
வெங்காயம்

வெங்காயத்தை தொடர்ந்து ஒரு முருங்கைக்காய் ரூ.50-க்கு விற்பனை

Published On 2019-12-08 13:04 GMT   |   Update On 2019-12-08 13:04 GMT
நாடு முழுவதும் வெங்காய விலை கடும் உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முருங்கைக்காய் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை:

நாடுமுழுவதும் வெங்காய விலை கடும் உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.150க்கும், சின்ன வெங்காயம் ரூ.150க்கும் விற்கப்பட்டு வருகிறது.

வெங்காயத்தைத் தொடர்ந்து முருங்கைக்காயின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சில நாட்களாகவே முருங்கைக்காயின் விலை உயர்ந்திருந்தது.

ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முருங்கைக்காயின் விலை மேலும் உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.350க்கு விற்கப்படுகிறது. அதை வாங்கும் வியாபாரிகள் சில்லரை விலைக்கு விற்கும் போது ஒரு முருங்கைக்காயை ரூ.40 முதல் ரூ. 50 வரை விற்கிறார்கள்.

இதுகுறித்து கோயம்பேடு வியாபாரி ஒருவர் கூறும்போது, பொதுவாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் 80 முதல் 100 டன் வரை வரும். சீசன் இல்லாத தற்போதைய காலத்தில் சராசரியாக 10 டன் வரை முருங்கைக்காய் வரத்து இருக்கும்.

ஆனால், தற்போது கடும் விளைச்சல் குறைவு காரணமாக ஒரு டன் முருங்கைக்காய் மட்டுமே வருகிறது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

திருச்சியில் ஒரு முருங்கைக்காய் ரூ.50ல் இருந்து ரூ.80 வரை விற்கப்படுகிறது.

Tags:    

Similar News